கடல் மற்றும் வான் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை

நாட்டின் இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்கில், அரசாங்கம் விசேட தேசிய வேலைத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாடே ஒன்றாக தேசிய திட்டத்தின் கீழ், கடல் மற்றும் வான்வழி போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று போதைப்பொருள் பிரிவு பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாலில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மிக முக்கியமான சொத்துக்களான இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக விசேட தேசிய வேலைத்திட்டம் ஒன்று தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை ஜனாதிபதியின் தலைமையில், ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நாடே ஒன்றாக என்ற தேசிய இயக்கம் தொடங்கப்பட்டு தற்போது 7 மாதங்களுக்கும் மேலாகிறது. இக்காலப்பகுதியில் இலங்கை பொலிஸ்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, முப்படைகள், புலனாய்வுத்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் பல பாரிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

நாட்டிற்குள் பெரும்பாலான போதைப்பொருட்கள் கடல் வழியாவே கடத்தி வரப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக வான்வழியாகவும் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது. கடல் மார்க்கமாக நடைபெறும் இந்த சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காகப் புலனாய்வுப் பிரிவினர், கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெருமளவிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அண்மைக்காலமாக வான்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வரும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற கனேடிய நாட்டுப் பெண் ஒருவர் 35 கிலோ கிராம் போதைப்பொருளுடனும், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த நபர் ஒருவர் 47 கிலோ கிராம் போதைப்பொருளுடனும் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் நவீன ஸ்கேனிங் மற்றும் சோதனை நடவடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதுமட்டுமன்றி போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதுடன் நின்று விடாமல் அதன் பின்னணியில் காணப்படும் சர்வதேச கடத்தல் காரர்களின் வங்கிக் கணக்குகள் நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் அவர்களது உள்நாட்டு முகவர்களைக் கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டிற்குள் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படும் இந்த வலையமைப்பை முற்றிலுமாக முடக்கி, அதனை வேரோடு அழிப்பதே அரசாங்கத்தினதும், அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினதும் முதன்மையான நோக்கம் ஆகும் என்றார்.