அரச திணைக்களங்கள் தான் அதிகளவில் உள்ளுராட்சிச் சட்டங்களை மீறுகின்றன. அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாணங்களில் 90 வீதமானவை உள்ளராட்சி மன்றங்களின் கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளுராட்சிகளின் அனுமதியைப் பெற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், ஆளுநர் அவர்களது அறிவுறுத்தலின் பிரகாரம் எமது சட்டங்களின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு வியாபார உரிமம் வழங்கப்படுவதாயின் குடிபுகு சான்றிதல் பெற கட்டாயப்படுத்துகின்றோம். இவ்விடயத்தில் ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. மக்கள் மட்டுமல்ல அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும். சட்டங்களை உச்சமாக மக்கள் மீது மட்டும் பிரயோகித்து நாம் சட்டத்தின் ஆட்சி என புலங்கிதம் அடைய முடியாது. அரச நிறுவனங்களின் கட்டுமாணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரச கட்டிடங்கள் உள்ளுராட்சியின் அனுமதி பெறாது உள்ளது. குடிபுகு சான்றிதல் இல்லை. பாடசாலைகள் கூட அனுமதி பெறுவதில்லை. ஆகவே இக் கட்டிடங்களில் சுகாதாரம், உரிய பாதுகாப்பு, பயன்பாட்டு அங்கீகாரம் இன்றி தான்தோன்றித்தனமாக உள்ளுராட்சிச் சட்டங்களை மீறி பல அரச நிறுவனங்கள் செயற்படுகின்றன.
தனியாரின் கட்டிடங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்று இடித்தளிப்பதற்கான அனுமதியைப் பெறும் எமது உள்ளராட்சி மன்றங்கள் அரச தாபனங்கள் விடயத்தில் மக்களுக்கு மட்டும் சட்டம் ஏனையோருக்கு விடுபாடு என கூற இயலாது. ஆகவே அமைக்கப்பட்ட அரச கட்டுமாணங்கள் தொடர்பில் விரைவான பரிசீலித்து அனுமதிக்க நாம் தயார். நாம் சில நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்கத் தயாராகவுள்ளோம். என வலிகாமம் கிழக்கப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.





