கந்தளாய், ரஜஎல யூனிட் 05 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
கார் எரிவதைக் கவனித்த வீட்டார் மற்றும் அயலவர்கள் உடனடியாக ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், தீ வேகமாக பரவி காரை முற்றாக சேதப்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. யாராவது திட்டமிட்டு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானாகவே தீப்பற்றியதா? என்ற இரு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், தடயவியல் நிபுணர்களின் உதவியையும் பெற திட்டமிட்டுள்ளனர்.



