கல்வி சீர்திருத்தச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நிபுணர் குழு

கல்வி சீர்திருத்தச் செயல்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்க மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இந்தக் கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கு 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அத்துடன், 23,304 பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி மார்ச் 5ஆம் திகதியுடன் நிறைவடையும். அதன் பின்னர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும்.

சாதாரண தர முறைமை வழமை போன்று தொடரும், ஆனால் புதிய பாடத்திட்ட மேம்பாட்டுடன் அதன் வடிவம் மாற்றமடையும். இந்தச் செயல்பாட்டின் கீழ் மதிப்பீட்டு முறைகள் அமல்படுத்தப்படும். எமது நாட்டைப் போன்ற சூழலில், ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக சில சிக்கல்கள் எழக்கூடும் என்பதை நாம் அறிவோம். இது குறித்து கலந்துரையாடி, அந்த விகிதாசாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நிபுணர்கள் தீர்மானிப்பார்கள்.

குறிப்பாக ஆங்கிலப் பாடத் தொகுதியில் சில குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையாலேயே இவ்வாறான விடயங்கள் பாடப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஏனைய பாடப்புத்தகங்கள் தொடர்பிலும் நிபுணர்கள் ஊடாக ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் மூலம், 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து மீண்டும் கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகளை ஆரம்பிப்போம்.

2026ஆம் ஆண்டிலிருந்து 6 ஆம் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்குத் தயாராக இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அந்த மாணவர்களுக்கு 7 ஆம் தரத்திலிருந்தாவது இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை அரசியல்வாதிகளாகிய நாம் தீர்மானிக்க முடியாது.

கல்வியியலாளர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, 2027இல் 7ஆம் தரத்திலிருந்து மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியுமா என ஆராய்வோம். இந்தச் சீர்திருத்தச் செயல்பாடுகளைத் தொடர தேவையான நிபுணர்கள் மற்றும் குழுவினரை உள்ளடக்கிய குழுவொன்றை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.