கிளிநொச்சி காவல் துறை நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு இளங்குமரன் எம்.பிக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்றையதினம்(17) பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகரான தன்னை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தாக்கியதாக குறித்த கிராம சேவகர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேய நீதிமன்றம் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை தொடர்புகொண்டு வினவியவேளை, கிளிநொச்சி காவல் துறை எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக எனக்கு தெரியவந்த நிலையில் சட்டத்தரணி ஊடக அந்த வழக்கிற்கான முன் நகர்த்தல் பத்திரத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
அந்தவகையில் அந்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி காவல் துறை இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், காவல் துறை நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் எனக்கு பணிப்புரை விடுத்தது.
காவல் துறைர் என்னை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது என்ற தவறான செய்தி பரவுகிறது. அது முற்றுமுழுதான பொய் என குறிப்பிட்டுள்ளார்.




