சட்டவிரோதமாக கொண்டு வந்த செல்லப்பிராணிகள் மீட்பு!

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.01 மணியளவில் இவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, இவரது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிக்குள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 38 விலங்குகள் மீட்கப்பட்டன. அவற்றுள் கினிப் பன்றிகள், அணில் வகைகள், சுகர் கிளைடர்கள், புறாக்கள், முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகள் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கண்டி, திகனை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள், அவருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளனர்.

மீட்கப்பட்ட செல்லப்பிராணிகளை மீண்டும் தாய்லாந்தின் பேங்காக் நகருக்கே திருப்பி அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த விலங்குகள் தாய் ஏர்வேஸ் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.