ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மனுவொன்றின் ஊடாக இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, பிரதிவாதி வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவேண்டியுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துவதற்கு உத்தரவிட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்காக எழுதப்பட்ட காசோலை ஒன்றைத் தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்ததன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியே பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.




