யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்ததுடன் இந்த மனித புதைகுழி தொடர்பிலான அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன் நீதிமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா ஆஜரான தலைமையிலான குழுவினர் ஆஜரானதுடன் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி பூரணி ஆஜராகி இருந்தார்.
இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமான சூழல் இருப்பதாக அவர் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குறித்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்ட செலவீனங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் நீதி அமைச்சுக்கு இது தொடர்பில் ஞாபகமூட்டும் கடிதம் ஒன்றினை அனுப்ப உடனடியாக உத்தரவிட்டார்.
எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பாதீட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அவ்வாறான அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது சந்தேகம் நிலவுகிறது.
எனினும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாதீட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மீண்டும் ஒருமுறை ஆராய இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் தேதி மீள விசாரணைக்கு அழைக்குமாறு நீதிவான் லெனின் குமார் உத்தரவிட்டார்.
இதன்போது காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செம்மணி மனித புதைகுழி வளாகத்தை பார்வையிட அனுமதி கோரியுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டு அதற்காக அனுமதி கோரினார்.
இது தொடர்பாக கவனம் செலுத்திய நீதிவான் லெனின் குமார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முதலோ அல்லது அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகோ குறித்த வளாகத்தை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்து செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வழக்கு பொருட்களின் கால நிர்ணயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு கட்டளை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரினர்.
இது தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேநேரம் இதுவரையில் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான செலவீனங்கள் குறித்த பாதீட்டுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்ற விடயம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் திருத்தப்பட்ட பாதீடு ஒன்றை அது தொடர்பில் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்வைத்து அதற்கு அனுமதி கோரினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ்.
நீதிவான் லெனின் குமார் அந்த பாதீட்டுக்கும் அனுமதி அளித்தார். இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை தீர்மானிப்பது தொடர்பான விடயத்துக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.





