ஜப்பானில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுனாமி ஆபத்து இல்லையெனினும், நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்த பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில நாட்களாக நில அதிர்வுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 20-ம் திகதி வடக்கு இவாட்  மாகாணத்திற்கு அப்பால் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் கொண்ட மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

அந்தச் சமயத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.