மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பயணத்தை அடுத்து, கட்சிக்குள் நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ரில்வின் சில்வா, தனது பயணம் தொடர்பான விவரங்களைக் கட்சியினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் இறுதியில், மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி உடனடியாகத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் கட்சிக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் முதற்படியாக, இன்று ஞாயிற்றுகிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பெண்கள் தினக் கொண்டாட்டப் பேரணி, மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பியின் களம் இறங்கும் ஆரம்பப் புள்ளியாக அமைய உள்ளது. கடந்த சில காலங்களாக மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜே.வி.பி தலைமையகம் மட்டுமன்றி, இந்தியாவிலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என இந்தியாவிற்கும் ஏனைய தரப்பினருக்கும் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய செல்வாக்கு 20 வீதம் – 30 வீதம் ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளியாகும் கருத்துக்களால் கட்சித் தலைமை கவலையடைந்துள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பின்னடைவுகளின் போது பெலவத்தைக்குத் தெரியாத இந்த அதிர்வு, இப்போது நாடு முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்களால் உணரத் தொடங்கியுள்ளது.
இதனைச் சரிசெய்ய அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 6-7 மாத காலப்பகுதிக்குள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றவும், பின்னடைவைச் சந்தித்துள்ள துறைகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ‘திருடர்களைப் பிடிக்கும்’ பணிகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. இந்த அனைத்து நகர்வுகளும் இறுதியாக மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியே அமையப்போகிறது. எவ்வாறாயினும் மார்ச் 8 கொழும்பு மகளிர் பேரணி, ஜே.வி.பியின் பலத்தைக் காட்டும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





