தம்புள்ளை – யாபாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் திருமணமாகி மூன்று மாதங்களையே சந்தித்த இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு:
தம்புள்ளை, யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும், அவரது மனைவியான 22 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
திருமணத்தின் பின்னர் கம்பஹா பகுதியில் உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த இவர்கள், அங்கேயே வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வதுபிடிவல பகுதியில் இவர்களது மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்றுடன் மோதியதில் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் யாபாகம பொது மயானத்தில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றன.
இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் போது தமது உயிரின் பெறுமதியை உணர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிராமவாசிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.




