தியாகத் தாய். அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்மையாரின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (09.04.2026) முற்பகல்-10.45 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக ஆரம்பமானது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் ஊர்திப் பவனியின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் சுடரேற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் ஊர்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்துக்கு முன்பாக ஈகைச் சுடரேற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது.
இதேவேளை, அன்னை பூபதியின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களின் பல்வேறு இடங்களையும் வலம் வந்து இந்த மாதம்-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலுள்ள நினைவிடத்தைச் சென்றடையுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.




