தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
தேவேந்திரமுனை கடற்பரப்பிற்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கடற்படையினரால் வழிமறிக்கப்பட்ட குறித்த படகு, இன்று திங்கட்கிழமை காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 06 மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 123 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 300 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.





