“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விகாரை” எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.
அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





