நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினால் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்காக விசேட இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பாதுகாப்பான முறையிலும் பொறுப்புடனும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமாகும்.

நவீன காலத்தில் ஆட்சி நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல்களில் டிஜிட்டல் தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியமானது என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இணைய சுகாதாரம், பாதுகாப்பான ஒன்லைன் தொடர்பாடல் முறைகள் மற்றும் டிஜிட்டல் சூழலில் பாதுகாப்பாக இயங்குவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து கருத்தரங்கு வேளையில் விளக்கமளிக்கப்பட்டது.

‘பிஷிங்’ போன்ற இணைய அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பது மற்றும் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ டிஜிட்டல் தொடர்பாடல்களைப் பாதுகாப்பது குறித்து செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, Sri Lanka CERTஇன் தலைவர்  திலக் பத்திரகே மற்றும் அதன் பதில் நிறைவேற்று அதிகாரி கலாநிதி கனிஷ்க கருணாசேன ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இதன்போது விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

தேசிய இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வுத் திட்டங்களை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.