நிலக்கரி தொடர்பாக வெளிவந்த கணக்காய்வறிக்கையை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கணக்காய்வாளர் நாயகத்தின் சுயாதீன செயற்பாடுகளுக்கே சவாலாக அமையும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் கணக்காய்வு அறிக்கை தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு 2025-2026 ஆண்டு காலப்பகுதிக்கான நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையொன்று இன்றளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்ற மரபின்படி இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு நகல்களாக வழங்கப்பட்ட பின்னர், இந்த அறிக்கையில் மேலும் விடயங்களைச் சேர்த்து, இதற்கு முன் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல் குறித்த புதிய விடயங்களை இணைப்பது நெறி முறைசார் விடயமாக அமைந்து காணப்படவில்லை
ஆனால் முந்தைய கொள்முதல் விடயங்களையும் ஆராய்ந்து கலந்துரையாடுவது பொருத்தமானது. தெரிவிக்கப்படும் வகையில் இந்த கணக்காய்வு அறிக்கைக்கு மேலதிகமாக மேலும் சில விடயங்கள் குறித்த அறிக்கையை கோப் குழு மூலம் சமர்ப்பிக்க தயாராகி வருகின்றனர். அந்தந்த காலகட்டங்களில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முறையான ஆய்வை மேற்கொண்டு அந்த அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் கணக்காய்வாளர் நாயகத்தின் சுயாதீன செயற்பாடுகளுக்கே இது சவாலாக அமையும். அத்தோடு இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் விடயமாகவும் அமைந்துள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறை மீறல் சார் விடயங்களின் அடிப்படையில் முன்னய விடயங்கள் குறித்து முறையான விசாரணையை மேற்கொண்டு, வேறாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் முறையாகச் சமர்ப்பியுங்கள். அதனை இந்த லக்விஜய மின்நிலையத்தின் கணக்காய்வு அறிக்கையோடு இணைக்கக்கூடாது. இது தொடர்பாக எனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.




