நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும் பாதிப்பை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதால் நீதித்துறைக்கு எவ்வாறான வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும், நீதிமன்ற கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்;கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் மக்கள் நலன்சார்ந்த வகையில் உருவாக்கப்பட்டது. நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசும் ராஜபக்ஷர்கள் தமது அரசியல் இருப்பை பலப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் 18 மற்றும்20 ஆம் திருத்தங்களை கொண்டு வந்தார்கள்.

அரசியலமைப்பின் 18 மற்றும் 20ஆம் திருத்தம் நீதித்துறையினதும், ஜனநாயகத்தினதும் அம்சங்களை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டன. நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்துக் எதிராக இன்று குரல் கொடுக்கும் தரப்பினர் அன்று இவ்விரு திருத்தங்களுக்கும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதால் நீதித்துறைக்கு எவ்வாறான வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.