நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஐஸ் வழக்கு சந்தேகநபர் தப்பினார்

ஐஸ் போதைப் பொருளினை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக வேண்டி அழைத்துச் சென்றபோது பொலிஸாரது பாதுகாப்பில் இருந்து சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மதவாச்சி நீதிமன்ற வளாகத்தில் 16 ஆம் திகதி நேற்றுப் பகல் 12.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதவாச்சி வஹமள்கொள்ளேவ ரணவிரு கம்மான பகுதியை வசிப்பிடமாக கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என்பது மேலும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.நேற்று சந்தேக நபரை மதவாச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக வேண்டி அழைத்துச் சென்றுள்ளது டன் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சந்தேக நபருக்கு விலங்கிடப்பட்டிருந்த கை விலங்கினை பொலிஸார் கட்டுவதற்கு முயற்சித்தபோது சந்தேக நபர் பொலிஸாரது பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது மேலும் தெரிய வந்துள்ளது.

தப்பிச் சென்ற சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக வேண்டி மதவாச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பல கோணங்களிலும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.