நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு, சம்பவத்திற்கான காரணங்கள், அது குறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு இன்று (6) கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோஹன் வீரகோன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினால் இச்சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களும் விரிவாக விசாரணை செய்யப்பட்டு, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


