பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் !

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நீண்டகாலம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகுமார் மற்றும் முன்னாள் இணைந்த வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒன்றுமையுடன் பயணிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அக்கட்சியின் சார்பில் எவரும் சந்திப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அதனையடுத்து தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் எதிர்வருங்காலங்களில் நடாத்தப்படும் சந்திப்புக்களில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் கலந்;துகொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அக்கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து சுமந்திரனிடம் வினவியபோது, அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தமக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும், இருப்பினும் அன்றைய தினம் கொழும்பில் இருக்கவேண்டியிருந்த காரணத்தால் அதில் பங்கேற்க முடியவில்லை எனவும் பதிலளித்தார்.

அவ்வாறெனில் இவ்விடயம் தொடர்பில் எதிர்வருங்காலங்களில் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்துகொள்வீர்களா எனக் கேள்வி எழுப்பியபோது, அதற்கு சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்:

‘மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது, அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நாம் தமிழ்த்தரப்புக்களுடன் மாத்திரமன்றி கொழும்பை மையமாகக்கொண்டு இயங்கும் அமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகிறோம். அதற்கமைய தமிழ்த்தரப்புக்களால் இந்த நோக்கத்துடன் ஒழுங்குசெய்யப்படும் கலந்துரையாடல்களில் பங்கேற்போம். இருப்பினும் அவை எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்புக்களாக இருந்தால், அவற்றில் பங்கேற்பது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானிக்கமுடியும்’ என்றார்.