வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களை கைப்பற்றி வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் குகணேசபுரம் கருங்காலிச்சோலையில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளரின் காணியில் இன்று அதிகாலை புதையல் தோண்டப்பட்ட பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போதே 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கருங்காலிச்சோலை, ஓட்டமாவடி, நவகந்தேகம, உயாங்கொட, நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.




