பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பேருந்துகளில் பயணம் செய்யும் போது அறிமுகமாகும் நபர்கள் வழங்கும் உணவுப் பண்டங்களை உட்கொள்வதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற அதிகாரி ஒருவர் இது தொடர்பில்  இக்கட்டான நிலை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.

தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், பணி நிமித்தம் பொரளைக்கு சென்றுவிட்டு இரவு பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் இவருக்கு அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் இவருடன் சிநேகபூர்வமான நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர், அந்த நபர் பிஸ்கட் பக்கட் ஒன்றை எடுத்து, இந்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கும் கொடுத்துள்ளார். அதனை வாங்கி உட்கொண்டவருக்கு, அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை.

5 நாட்களுக்குப் பின்னர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சுயநினைவுக்கு வந்துள்ளார். எனினும், அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் அனைத்தும் திருடப்பட்டிருந்தன.

வைத்தியசாலையில் எனது கணவரைப் பார்த்தபோது அவர் ஒரு பிணம் போல குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் கிடந்தார் என பாதிக்கப்பட்ட அதிகாரியின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து நாட்களின் பின்னரே அவரை வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஆனால் இன்னமும் அவருக்குச் சரியான சுயநினைவு திரும்பவில்லை. உடல் வலியால் அவதிப்படுகிறார்.

கணவர் அணிந்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மோதிரம் கொள்ளையிடப்பட்டுள்ளது. தொலைபேசி மாத்திரம் எஞ்சியிருந்தது என அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Warning For Bus Passengers

வைத்தியசாலைச் செலவுகள் மற்றும் மேலதிக பராமரிப்புக்காக ஏற்கனவே இலட்சக்கணக்கான ரூபாய் செலவாகியுள்ளது.

இன்னமும் முழுமையாக குணம் அடையாததால் மேலதிக பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த குடும்பம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.