போலி வர்த்தக முத்திரையுடன் பீடி தயாரித்த நால்வர் கைது

பிரபல பீடி நிறுவனமொன்றின் வர்த்தக முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி பீடிகள் தயாரித்து சந்தைக்கு விநியோகித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை (16) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போலி வர்த்தக முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான பீடிகள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31 முதல் 62 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பமுணுகம, நாரங்கொட மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்