மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி  ட்ரோன் கேமராவை  பறக்க விட்ட சிறுவன் ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை (09)  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில்  பதிவு செய்யப்படாத  ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ்   புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மன்னார் சௌத்பார்  பனங்கட்டுகொட்டு பகுதியில்  குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட குறித்த  சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்  மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.