முள்ளிவாய்க்காலில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆவது ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதிப் போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த பெண்ணால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது.

அதனையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இதன்போது, உறவுகளை இழந்தவர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாளின் 17ஆவது ஆண்டு  நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், மதத் தலைவர்களும், பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நினைவேந்தலில் நிகழ்த்தப்பட்ட “முள்ளிவாய்க்கால் பிரகடனம் – 2026” உரை…

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத் தமிழ் உறவுகளே!

தமிழ் இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ் இன அழிப்புச் செயன்முறை ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்று பரிணாமத்தைக் கொண்டது. பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் நலன்களுக்காகவும், சிங்கள-பௌத்த பேரினவாத ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதற்காகவும், கூட்டு தமிழ் இன அரசியல் வேணவாவை, அதன் ஆயுத பரிமாணத்தை தமிழ்ழின அழிப்பிற்க்கூடாக முடிவுக்கு கொண்டு வந்ததன் மாயையை முள்ளிவாய்க்காலில் நிகழும் தமிழ்ழின அழிப்பு நினைவு கூரல் தகர்த்து எறிகின்றது. 17 ஆண்டுகள் கடந்தும் இம்மண்ணிலே கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்கள் இன்றி, ஆகாயமே எல்லையாக, அவர்களின் கனவுகளை சுமந்து வரும் காற்றே சாட்சியாக, இரத்தம் தோய்ந்த மண்ணில் தேசத்திற்கான கனவுகளை சுமந்து, அடக்கு முறையை எதிர்த்து, விடுதலைப் பயணத்தை கூட்டாகத் தொடர ஒரு தேசமாக முள்ளிவாய்க்கால் திடலில் ஒன்று கூடியுள்ளோம். எமது கூட்டு அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை, அறத்தாற்பரியம் கொண்டவை. இவை இன்னொரு கூட்டு குழுமத்தின் கூட்டுத்தனி இருப்பை அச்சத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதையும் மீள வலியுறுத்துகின்றோம்.

பேரரசுக் கட்டமைப்பின் வல்லாதிக்கப் போட்டியில் ஏக துருவ உலக ஒழுங்கை தக்க வைப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், பல்துருவ பூகோள ஒழுங்கை கட்டமைப்பதற்காக சீனா, ரஸ்யா போன்ற ஏனைய நாடுகளும் தத்தமது புவிசார் நலன்களை முன்னிறுத்தி போரினை முன்னெடுத்து வருகின்றன. புதிய புதிய உலக ஒழுங்குக் கட்டமைப்பு, நவதாராளவாத ஏகாதிபத்தியச் சட்டகத்திற்குள்ளிருந்தே கட்ட கட்டமைக்கப்படுமாக இருந்தால், பூர்வீகக் குடிகளின் இருப்பு தொடர்ந்தும் கேள்விக்குட்பட்டதே. ஏக துருவத்திலிருந்து பல் துருவ உலக ஒழுங்கிற்கு மாறினாலும் அது பேரரசுக் கட்டமைப்புச் சட்டத்தில் இருந்து மாறுபடப் போவதில்லை. இவ்வாறு மாறுபடுகின்ற உலக ஒழுங்கிற்கு ஏற்ப நமது கூட்டு விடுதலை வழித்தடத்தின் தந்திரோபாய உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி, தந்துரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன்று எங்கள் முன்வைத்துள்ளது.

தமிழ்த் தேசிய விழுமிய அடிப்படைகள், மாற்று உலக ஒழுங்கிற்கான முன் மொழிதல்கள் என்பதனையும் பேரரசுக் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதையும், தமிழ் தேசிய வரலாற்றுப் பட்டறிதலுக்குட்பட்டு நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். நவ தாராளவாத, தாராளவாத சட்டக அடிப்படைகளுக்கு உட்பட்டு கட்டமைக்கப்படும் துருவப் பேரரசு கட்டமைப்பு பூர்வீக குடிகளின் இருப்பையும், அவர்களின் நிலத்தினுடனான உறவையும் துண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதை வரலாறு கோடிட்டு காட்டியுள்ளது. பூர்வீக மக்களின் நில மீட்பிற்கான எழுச்சி பூகோளம் முழுவதும் ஆங்காங்கே எதிரொலித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். தமிழினம் உலகத்தின் மூத்த பூர்வீகக் குடி. தமிழினத்திற்கும் நிலத்திற்குமான உறவையும் அதனுடைய கூட்டுச் சார்புத் தன்மையையும் சங்ககால திணைக்கோட்பாடு தொல்காப்பியத்தில்லிருந்து எமக்கு தந்துள்ளது. திணை வாழ்க்கை முறை, வாழ்தலை, பிளவுகளாக கட்புலனுணர்ந்ததாக தெரியவில்லை. வாழ்தல், தன்மை முன்னிலை படர்க்கை

என்னும் மூவிட உறவுமுறையில் தங்கி இருந்தது என்பதை அரச கட்டமைப்பிற்கு முன்னிருந்த திணை முறைமை தெளிவு படுத்துகின்றது.

ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், ஈழத் தமிழ்த் தேசம் என்றுமில்லாதவாறு சிங்கள-பௌத்த தேசிய பேரினவாதத்தாலும், ஏக-பல்துருவ பேரரசுக் கட்டமைப்பினாலும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அடக்கு முறையின் பல்வேறு வடிவங்கள் நாளாந்த வாழ்வியலாக சாதாரண மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசத்தின் நிலம் தொடர் அபகரிப்பிற்க்குட்ப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமயமாக்கத்தின், சிங்கள-பௌத்தமயமாக்கத்தின் செறிவு அதிகரித்துள்ளது. மத அடையாளங்கள் குறிப்பாக சைவ சமய தலங்கள் தொடர் இலக்குகளாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழரின் பண்பாடு தேசிய தற்காலத்திற்கு பொருத்தபாடற்றதாகச் சித்தரிக்கப்பட்டு அழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழரின் அடையாளங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன. தமிழ் தேசிய பூர்வீக வரலாறு சிதைக்கப்பட்டு, சிங்கள இனத்தை பூர்வீகக் குடிக குடிகளாக மாற்றும் வரலாறு உருவாக்கப்படுகிறது. உதாரணமாக திராவிடனாக இருந்த தந்த இராவண மன்னன் தற்போது சிங்கள ஆரியனாக மாற்றப்படுவதற்குரிய ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முன்னொரு காலத்தில் கல்வியில் பெருமை பாராட்டிய தேசம் இன்று கல்வியை தொலைத்து விட்டிருக்கின்றது. போதைப் பொருள் பாவனையை சிங்கள-பௌத்த பேரினவாத அரசு ஒரு போர் முறையாகக் கட்டமைத்து, இளைய தலைமுறையை திட்டமிட்டு அழித்து வருகின்றது, வளரும் தலைமுறையை போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்துவதின் ஊடாக தமிழின எழுச்சியை தொடர்ந்து தடுப்பதற்கான முயற்சிகளை ஏற்கனவே சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான எதிர்ப்பும் ஓர் அரசியல் யுத்தமே.

பருத்து தமிழ் இன அழிப்பிற்கான பொறுப்புக் கூறலின் நீதிப் பொறிமுறைகளை சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. இனவாதத்திற்கு எதிராக பேசுகின்ற அரசு, பொறுப்பு கூறல் பொறிமுறை அனைத்தையும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தக்க வைப்பதற்காக திரிபுபடுத்தி உள்ளது. தமிழ் இன அழிப்பிற்கான நீதிவேண்டிய நீண்ட போராட்டத்தை, சிங்கள அரசும் அதன் அடி வருடிகளும் மலினப்படுத்தியும், சிதைத்தும் வருகின்றன. நிலமீட்புக்கான போராட்டங்களையும், தமிழ் இன வரலாற்றுத்தடய அடையாளங்களின் மீட்புப் போராட்டங்களையும், வலிந்து காணாலாக்கப்பட்ட சொந்தங்களின் நீதி வேண்டிய போராட்டங்களையும் சிங்கள அரசு திட்டமிட்டு வன்முறையை பிரயோகித்து அடக்கி வருகின்றது. ஒட்டுமொத்தத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத அரசும் பேரரசுக் கட்டமைப்பும் இணைந்து ஈழத் தமிழினத்தின் மீது என்றுமில்லாதவாறு மிகப்பெரும் போரை வெவ்வேறு வீயூகங்களுக்கு ஊடாக கட்டமைத்துள்ளது. இப்போரை ஈழத்தமிழரின் கூட்டுஉள் கூட்டுஉளவியலின் மீதான போராக வடிவமைத்துள்ளதை மறுக்க முடியாது.

ஈழத் தமிழ்ச் சொந்தங்களே!

சிங்கள பௌத்த பேரினவாதமும், துருவப் பேரரசுக் கட்டமைப்பும் என்றுமில்லாதவாறு ஈழத் தமிழ்த் தேசத்தின் மீது பெரும் போரை கட்டவிழ்த்துள்ளது. இப்பெரும் போர், ஈழத் தமிழ்த் தேசத்தின் நிலம், கடல் சார் கேந்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்கிறது. ஈழத் தமிழ்த் தேசத்தின் புவிசார் அரசியலில் நிலம்-கடல் சார்ந்த கேந்திரத் தன்மை மிகவும் முக்கியமானது. ஈழத் தமிழ் தேச நிலம்-கடல் சார்ந்த கேந்திர தன்மையை சிங்கள-பௌத்த ஒற்றையாட்சிக்குட்பட்ட அலகிற்குள் உள்வாங்குவதனூடாகவும், ஈழத்தமிழ் தனித்தன்மையையும், தமிழ் தேசமாவதற்குரிய அலகுகளை இல்லாமல் செய்வதன் ஊடாகவும், சிங்கள பௌத்த பேரினவாதம் தனது ஒற்றை ஆட்சி அலகை திடப்படுத்தி வருகின்றது.

தமிழ்த் தாயகத்தின் நீட்சியே புலம்பெயர் ஈழத்தமிழினக் கூட்டு அலகு என்பதை கண்காணித்து வருகின்ற சிங்கள அரசு, புலம்பெயர் ஈழத் தமிழினத்தின் மீதும் பெரும் போரை கட்டவிழ்த்துள்ளது. குறிப்பாக தொப்புள்க்கொடி உறவுகளுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி, தொப்புளக்கொடி உறவுகளை கத்தரிக்க முனைந்து வருகின்றது. இச்சூழலில் என்றுமில்லாதவாறு உறவுகை உறவுகளை ஆழப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை எழுகின்றது. எழுகின்றது. த தற்போது ஈழத் ஈழத் த தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்காலில் சந்தித்ததை விட மிகக் கொடூரமான போர். ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும், அதன் இருப்பின் மீதும், கூட்டு உளவியலின் மீதும், தமிழ் தேசிய அடிப்படை விழுமியங்கள் மீதும் தொடுக்கப்படும் போர்.

பெருமதிப்பிற்குரிய ஈழத் தமிழ் உறவுகளே!

ஒட்டுமொத்தத்தில் தமிழ் தேசிய நம்பிக்கை மீதான போரை சிங்கள அரசும் துருவப் பேரரசுக் கட்டமைப்பும் கட்டவிழ்த்துள்ளது. தமிழ் தேசிய நம்பிக்கை தான் ஈழத் தமிழினத்தின் ஆத்மா. தமிழ் தேசிய கூட்டு உளவியலின் ஆத்மா தான் எங்களுடைய கூட்டுத்திராணி. இதை வலுப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை என்றுமில்லாதவாறு இன்று எம்முன் வைக்கப்படுகின்றது.

நமக்குள்ள மிகப்பெரும் ஆயுதமாக விரிந்து கிடப்பது தமிழ் தேசிய நினைவுத்தினம். நாங்கள் நினைவு கூரும் வரைக்கும் எங்களை யாராலும் அழிக்க முடியாது. கழிந்த காலம் எமக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவி செய்கின்றது. தற்போதைய வரலாற்றுக் காலம் பண்பாட்டு மீள் எழுச்சிகான காலம். ஈழத் தமிழினம் எமக்கான வரலாற்று வேர்களைத் தேடிப் பயணிக்க வேண்டிய காலம். பண்பாட்டு மீள்எழுச்சி ஈழத் தமிழினத்திற்கான பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்துகின்றது.

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஈழத் தமிழர் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலி திடலில் நினைவு கூருவது மீண்டும் எமதினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரச அடக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காக தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட அணி திரள்வதைத் தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்படவில்லை.

இவ் வருடம் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் 50வது ஆண்டு நினைவு. சுதந்திரமும் இறைமையுமுடைய ஈழத் தமிழ்த் தனியரசே ஈழத் தமிழினத்தின் கூட்டு இருப்பையும், தமிழர் தேசத்தின் இருத்தலையும் உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்று உரக்கக் கூறிய வரலாற்று நிகழ்வு. தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படும் இத் தீர்மானத்தின் அடிப்படைகளையே முள்ளிவாய்க்கால் பிரகடனம் ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகின்றது.

இரத்தம் தோய்ந்த தோய்ந்த இம்மண்ணிலி இம்மண்ணிலிருந்து போராட, கனத்த காற்று சுமந்து வரும் அவர்களின் நினைவுகளின் மீதும் நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம்.

01. சிங்கள-பௌத்தமயமாக்கப்படும் தமிழ் தாயகத்தை தடுக்கவும் தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும்

02. தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டி அரச பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் உடந்தைத்தன்மையையும் வலியுறுத்தி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும்

03. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்

04. கூட்டு ஈழத் தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தடுக்கவும்

05. தமிழ் தேசிய நம்பிக்கையின் மீது உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்து அடிபணியாது போராடுவோம்.

இவ்வாறு இந்த முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.