யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை!

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்ததன் பின்னரே காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா புயல் தாக்கம் ஏற்பட்டவுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேரிடரை முகாமைத்துவம் செய்வதற்கும் 2025.11.28 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைகளின் பிரகாரம் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது.

சட்டத்தின் உறுப்புரையின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்ட அவசரகால காலம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பதற்ற நிலைமையை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.இதற்கமைவாகவே இம்முறையும் அவசரகால சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை. மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள்.

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும் என்றார்.