வரலாற்றுச் சாதனை : போராட்டங்கள் இன்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக்கூடுதலான சம்பள உயர்வு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, வீதிப் போராட்டங்களோ அல்லது தொழிற்சங்க வேலைநிறுத்தங்களோ இன்றி, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆகக்கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

வெலிமடை பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு நேரில் சென்று, தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல்களை நேரில் ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் வெறும் 10 ரூபாய் சம்பள உயர்வுக்காகவும் தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதை நிறுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது என நினைவுகூர்ந்தார்.

ஆனால் தற்போது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிக்கமைய, எந்தவிதப் போராட்டங்களும் இன்றி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சம்பள முறையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் தற்போது 1,750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கம்பனிகளின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் 200 ரூபாய் கொடுப்பனவும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன்படி 25 நாட்கள் பணிபுரியும் ஒரு தொழிலாளிக்கு கடந்த மாதத்தை விட இந்த மாதம் மேலதிகமாக 10,000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதுடன், 31 நாட்களும் பணிபுரிந்த சில தொழிலாளர்களுக்கு 12,400 ரூபாய் வரை மேலதிக கொடுப்பனவு கிடைத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் ஒரு தொழிலாளி ஆண்டுக்குச் சுமார் 1,44,000 ரூபாய் வரையான மேலதிக வருமானத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பைச் சாத்தியப்படுத்துவதற்காகத் தோட்ட நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சுமார் 39 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் நடாத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆண்டுகால வரலாற்றில், அவர்களது உரிமைகளையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையைத் துணிச்சலுடன் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவித்தார்.