சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 5 சீனப் பிரஜைகள் இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஷங்காய் நகரிலிருந்து இன்றையதினம் அதிகாலை 12.10 மணியளவில் ‘சீனா ஈஸ்டர்ன்’ விமான சேவைக்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் இந்த ஐந்து சந்தேகநபர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவே நாட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 497 கார்டன் அடங்கிய 99,400 சிகரெட்டுகள், 422 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சீனப் பிரஜைகளும் தற்போது விமான நிலைய சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான பொருட்களை அவர்கள் யாரிடம் ஒப்படைக்கக் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இத்தகைய கடத்தல் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், சுங்கப் பிரிவினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



