விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய வங்கி – டி.பி.சரத்

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்குச் சலுகை அடிப்படையில் கடன் வழங்கும் புதிய வங்கி ஒன்றை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபா உற்பத்திச் செலவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

வட்டிக் கடன்களைப் பெறுவதனாலேயே உற்பத்திச் செலவு அதிகரிக்கின்றது. இதைக் கருத்திற்கொண்டே புதிய வங்கி ஒன்றைத் தொடங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபா உற்பத்திச் செலவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், சீனாவுடன் கலந்துரையாடி ஒவ்வொரு விவசாயத் நடவடிக்கைப் பகுதியிலும் விவசாய உபகரண மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகின் அதிநவீன இயந்திரங்கள், புதிய உழவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், வரப்பு வெட்டும் மற்றும் வரப்பு கட்டும் இயந்திரங்கள் போன்றவை இதன் கீழ் கொண்டுவரப்படும். இந்த நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ளவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படும் என்றார்..