வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடுகளுக்கு சைவப் பெருமக்கள் அணிதிரளவேண்டும்!

வவுனியா வடக்கில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)   நடைபெறவுள்ள சிவராத்திரி தின விசேட வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக சைவப்பெருமக்கள் அனைவரும் அணிதிரண்டு வருகைதரவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடம் என்ற உரிமையை தொடர்ந்தும் நிலைநாட்டிட அனைத்துச் சைவப்பெருமக்களும் அணிதிரண்டு கலந்துகொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அழைப்புச்செய்தியினூடாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்தகாலங்களில் ஆட்சியாளர்களாலும், அரச இயந்திரங்களாலும் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகளின்போது சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இம்முறை சைவப்பெருமக்களின் வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படாதென கடந்த வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகளால் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்துச் சைவப் பெருமக்களும் எமது உரிமையை நிலைநாட்டிட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அணிதிரண்டு வந்து சிவராத்திரி வழிபாடுகளில் பங்கேற்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.