‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னை திரிசூலத்தில் இருவர் படுகொலை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை… இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சென்னை திரிசூலத்தில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள், அரிவாள் வெட்டு ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.
பாமக தலைவர் அன்புமணி: சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் இருவர் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பதும், ஊத்தங்கரை அருகில் முதியவர் படுகொலை செய்யப்பட்டு அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கின்றன.
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா: அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் அச்சமூட்டும் கொலைக்களமாக மாறி இருக்கிறது.
திமுக அரசாங்கத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்து போய் இருக்கிறது என்பதற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற சம்பவங்களே சாட்சி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



