நீரிழிவு நோயாளிகளுக்கு நாடு முழுவதும் பிப்.15 வரை இலவச மருத்துவ முகாம்

நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது.

இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் சவுந்தரி கூறியதாவது: உலகம் முழுவம் 9 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 1.30 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியர் சேம்பர்) சுரக்கும் நீரின் அழுத்தம் (இன்ட்ரா ஆக்குலர் பிரஷர்) இயல்பு நிலைக்கு மாறாக அதிகரிப்பதுவே, கண் நீர் அழுத்த நோய்.

இந்த நோயை அலட்சியப்படுத்தினால் பார்வை நரம்புகள் பாதித்து, பார்வை இழப்பு ஏற்படலாம். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதும் கண் நீர் அழுத்தத்துக்கு காரணமாகிறது.

ஆரம்பத்திலேயே கவனித்தால் தடுக்கலாம்: ஒவ்வாமை, தோல் நோய்கள் மற்றும் சுவாச பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீண்ட நாள்களுக்கு பயன்படுத்தினால் இந்த பாதிப்பு ஏற்படும்.

இதில், கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 85, 90 சதவீதம் நபர்களுக்கு தங்களுக்கு கண்நீர் அழுத்த நோய் இருப்பது இறுதி வரை தெரிவது இல்லை. விழிப்புணர்வு இருந்தால் பாதிப்பை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.

இந்த நோய் 40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு தான் அதிகம் வருகிறது. ஆனால், தற்போது இளம் வயதினரும் கண்நீர் அழுத்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

விழிப்புணர்வு நடவடிக்கையாக…. இதைக் கருத்தில்கொண்டு, விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிப்.15-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனையில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.