பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7,500ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க வீடு அல்லது வீடுகட்ட நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு மனைகள் வழங்க ஏற்பாடு செய்யவும், இதற்கு பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தொடங்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





