‘மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்குவதுடன், பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
‘டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அரசு பணிக்கும் ஆசிரியர் பணிக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ள 9,801 பேருக்கு பணிநிய மன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் பேசியதாவது: பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடித்து 1. 31 கோடி சகோதரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்குமான முதல்வராக இருந்து தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்தும் பொறுப்புணர்வு கூடியிருக்கிறது. நமது நிர்வாகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் எழுச்சியால் படிப்பை இறுகப்பிடித்து இளைஞர்கள் முன்னேறியுள்ளனர்.
உங்கள் கையில் இருக்கின்ற பணிநியமன ஆணை என்பது, உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எதிர்காலத்துக்கான உத்தரவாதம். ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக பணியாற்றினால், அந்த கிராமமே மாற்றத்தைக் காணும். ஒரு ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றினால், அறிவார்ந்த – ஒழுக்கம் மிகுந்த தலைமுறை உருவாகும், ஒரு மருத்துவர் கடமையுணர்வுடன் பணியாற்றும்போது, ஒரு உயிர்காப்பாற்றப்பட்டு, அவர்கள் குடும்பமே மகிழ்ச்சிக்குள்ளாகிறது.





