முல்லைப் பெரியாறு அணையை உடைக்க தொடர் முயற்சி! வைகோ கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,

“தேசிய மற்றும் சர்வதேச அணை பாதுகாப்பு நிபுணர்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் அணையின் சீரமைப்பு நடவடிக்கைகளையும், சாத்தியமானால் அணையை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட வேண்டும்.

1895 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு நதியில் அதிக தீவிரம் கொண்ட நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் சமீபத்திய ஆய்வுகள் அந்த அணை கட்டமைப்பு ரீதியாக ஆபத்தான நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன.

முல்லைப் பெரியாறு அணை, 1886 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும், திருவிதாங்கூர் மகாராஜாவிற்கும் இடையேயான 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. அணையில் மேம்பட்ட நீர் கசிவு கண்காணிப்பு அமைப்புகள் இல்லை. அதாவது அடித்தளத்தின் கடுமையான அரிப்பு கண்காணிக்கப்படாமல் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் ஆறு மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும். இது 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும். இந்தச் சாத்தியமான பேரழிவு முந்தைய அனைத்து கேரள துயரங்களையும் விட அதிகமாக இருக்கும். எனவே தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கி நீதிமன்ற மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இடைக்கால நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், விரிவான அணை பாதுகாப்பை மறுமதிப்பீடு செய்வதற்கோ, அணையைச் செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த சேவ் கேரள பிரிகேட் என்ற அமைப்பு தாக்கல் செய்த இந்த மனு மீது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அக்டோபர் 13ஆம் தேதி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது முல்லைப் பெரியாறு அணை பழமையான அணைகளில் ஒன்று என்று தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி. கிரி, இது 130 ஆண்டுகள் பழமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அணை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் இழப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.

அப்போது, தலைமை நீதிபதி கவாய், அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் அல்லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கலாம் அல்லது புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழகம், கேரள அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் இக்கருத்து தமிழ்நாட்டிற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.

முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எ°.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் சார்பில், பல்வேறு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வுகள் நடந்தன.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக நீதிபதி ஏ.எ°.ஆனந்த் குழுவின் அறிக்கை 2012 ஏப்ரல் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

“முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை; நில நடுக்கம் ஏற்பட்டாலும முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது” என்று நீதிபதி ஏ.எ°.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.

2014 மே 7 ஆம் தேதி அன்று அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியது. அத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடி என்ற அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவும், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர், அணை பலமாக உள்ளதால் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று அறிவித்தது. தமிழக அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது.

ஆனால், கேரள அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2014 டிசம்பர் 3 ஆம் தேதி, கேரளாவின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ‘முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே; அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை’ என்று தனது முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரிகேட் போன்ற அமைப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கேரள அரசின் இச்சதித் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்