பிரான்சில்அடுக்குமாடி குடியிருப்பில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் உடலங்களாக மீட்பு

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் ஈழத் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நீண்ட நாட்களாக எவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இருவரும் உடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், மரணத்திற்கான உத்தியோகபூர்வமான காரணத்தைக் கண்டறிய உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதேனும் கடிதங்கள் அல்லது மேலதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

தனிப்பட்ட மன உளைச்சல் அல்லது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இச்சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான இக்கட்டான சூழலில் உள்ளவர்களுக்கு உதவ பிரான்சில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் சமூக நல அமைப்புகளும் இயங்கி வருகின்ற நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.