ஜேர்மன் நகரமொன்றில், 103 வயதாகும் பெண்மணி ஒருவரை கௌரவிக்க முடிவு செய்த அந்நகர மேயர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அங்கு அவருக்கு மட்டுமல்ல, அந்த பகுதியில் வாழும் அனைவருக்குமே அதிர்ச்சியை அளிக்கும் ஒரு விடயம் காத்திருந்தது.ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Ruhmannsfelden என்னும் நகரில் வாழ்ந்துவந்த சோபி (Sophie B.) என்னும் பெண் 103 வயதை எட்டியதால், அவரை கௌரவித்து, அவருக்கு பரிசொன்றை வழங்க முடிவு செய்துள்ளார் நகர மேயரான Werner Troiber. ஆனால், அவர் சோபி வீட்டுக்கு வந்தபோது அவரை சந்திக்கமுடியவில்லை. சோபியின் மகளான கிறிஸ்டா (Christa B.) தன் தாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செக் குடியரசில் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, சோபியை தாங்கள் 10 ஆண்டுகளாக பார்க்கவில்லை என்றும், சோபியின் மகள், யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.
சந்தேகம் வலுக்கவே, மேயர் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்டுள்ளார்கள். வீட்டுக்குள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சோபியின் உயிரற்ற உடல் காய்ந்து சுருங்கிய நிலையில், வீட்டின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சோபியின் மகளான கிறிஸ்டா, தன் தாய் இறந்ததை மறைத்து, பல ஆண்டுகளாக அவரது ஓய்வூதியத்தைப் பெற்று செலவு செய்துவந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோபி பெற்ற ஓய்வூதியம், சுமார், 1,500 யூரோக்கள். கிறிஸ்டாவின் வயது, 82! ஆக, கிறிஸ்டா மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் பொலிசார்.



