இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒன்பது நாட்களில் காட்டு யானை தாக்கி 20 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சிங்பூம் மாவட்டத்திலுள்ள சாய்பாசா (Chaibasa) மற்றும் கோல்ஹான் (Kolhan) வனப்பகுதிகளில் ஜனவரி 01 முதல் 09 ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய சால் (Sal) காடுகளில் ஒன்றான இப்பகுதியில், ஒற்றை ஆண் யானை ஒன்று தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வருகிறது.
கடந்த 05 ஆம் திகதி குடும்பஸ்தரும் அவரது இரண்டு குழந்தைகள் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். அவரது மனைவி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
பாபாடியா கிராமத்தில் தந்தை, தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு வனத்துறை ஊழியரும் அடங்குவார் என மாவட்ட ஆட்சியர் சந்தன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த யானையைத் தேடும் பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கு வங்கத்தின் பாங்குரா மற்றும் குஜராத்தின் ‘வந்தாரா’ (Vantara) அமைப்பிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாரை தப்பட்டை முழங்கி மக்களை எச்சரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வனத்துறை அதிகாரி குல்தீப் மீனா,
“இந்த யானை தற்போது மதம் பிடித்த நிலையில் (Musth phase) இருக்கலாம். பொதுவாக இத்தகைய ஆக்ரோஷமான குணம் 15 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும். மேலும், காடுகள் அழிப்பு மற்றும் வாழிடங்கள் சுருங்குவதே இதுபோன்ற மோதல்களுக்கு முக்கியக் காரணம்,” எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கம் சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. யானையை விரைவில் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வனத்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.





