மேற்காசியாவில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவருடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
லெபனானின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிமின் (Naim Qassem) தனிச்செயலாளரும் மருமகனுமான அலி யூசுப் ஹர்ஷி உயிரிழந்ததாக சர்வதேச ஊகங்கள் தெரிவிக்கின்றன.
அவர், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் அலுவலகத்தின் நிர்வாக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். மேலும், காசிமின் நெருங்கிய உதவியாளரும் தனிப்பட்ட ஆலோசகராகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து, மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவை இஸ்ரேல் அரசு வரவேற்றுள்ளது. இருப்பினும், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் எனவும், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




