இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரின் ஆன் ஜான். இந்த தம்பதியின் 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாம்.
இந்நிலையில், கடந்த 5ம் திகதி குழந்தையின் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்தில் இருந்து திருவல்லாவுக்கு காரில் சென்றனர். அப்போது, எதிரில் வந்த மற்றொரு கார் இவர்களின் கார் மீது மோதியது.
இதில் ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள், குடும்பத்தினர் சம்மதத்துடன் குழந்தையின் கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வு, கண்கள் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, குழந்தையின் கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் வைத்தியசாலையில் உள்ள 6 மாத குழந்தைக்கு பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.
இதய வால்வு மற்றும் கண்கள், சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்பட்டன.
இதன் மூலம், கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வளித்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது.




