கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான அவரின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லிபியாவின் தலைநகர் திரிப்போலியிலிருந்து சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் (Zintan) நகரிலுள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவரது அரசியல் அணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் “கோழைத்தனமான மற்றும் துரோகமான படுகொலை” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சயிப் அல்-இஸ்லாமின் வழக்கறிஞர் கலேத் அல்-சாயிதி மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர், செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளங்களில் அவரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சயிப் அல்-இஸ்லாமின் சகோதரி ஒருவர் லிபிய தொலைக்காட்சியிடம், அவர் அல்ஜீரிய எல்லைக்கு அருகிலான பகுதியில் உயிரிழந்ததாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்த முஅம்மர் கடாபியின் மகன்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக சயிப் அல்-இஸ்லாம் கருதப்பட்டார். 1972ஆம் ஆண்டு பிறந்த அவர், 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் முன்னணியில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

2011ஆம் ஆண்டு கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது, அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதாக சயிப் அல்-இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் ஜின்டான் நகரில் உள்ள ஒரு ஆயுதக் குழுவினரால் கைது செய்யப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

2011 போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவரை விசாரிக்க முயன்றது. 2015ஆம் ஆண்டு, ஐநா ஆதரவு பெற்ற திரிப்போலி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பின்னர், சயிப் அல்-இஸ்லாம் ஜின்டான் நகரிலேயே வசித்து வந்தார். 2021ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், அந்தத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து லிபியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது நாடு இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில், சயிப் அல்-இஸ்லாமின் படுகொலை லிபிய அரசியல் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, திரிப்போலியைத் தளமாகக் கொண்ட உயர் அரசியல் பேரவையின் முன்னாள் தலைவர் கலேத் அல்-மிஷ்ரி, இந்த படுகொலை தொடர்பில் அவசரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சயிப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம், லிபிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுவதுடன், நாட்டின் எதிர்கால அரசியல் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்