ஜேர்மன் நெடுஞ்சாலை ஒன்றில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், வாகனம் ஒன்றில் ட்ரோன்கள், கமெராக்கள் முதலான சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருந்ததைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த இருவரைக் கைது செய்துள்ளார்கள்.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தின் தலைநகரான மியூனிக் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளார்கள்.
அப்போது, அந்த வாகனத்துக்குள் ட்ரோன் ஒன்று, கமெராக்கள், GPS ட்ராக்கர்கள், ரேடியோக்கள், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் இருந்தது தெரியவந்ததுடன், போலி அடையாள ஆவணங்களும் இருந்துள்ளன.
அதைத் தொடர்ந்து, அந்த வாகனத்திலிருந்த லாத்வியா நாட்டவரான 45 வயது நபர் ஒருவரையும், உக்ரைன் நாட்டவரான 43 வயது நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.





