சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளனர்.
விண்வெளி வீரர்களான நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கனடா விண்வெளி நிலையத்தின் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் ட்ரம்பை சந்தித்துள்ளனர். இவர்களுடன் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது விண்வெளி ஆய்வு மட்டுமன்றி, ஈரான் போர் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு குறித்தும் ட்ரம்ப் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“அவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதைச் செய்ய விரும்பமாட்டேன், ஆனால் நமது நாட்டைப் பெருமைப்படுத்த இவர்களைப் போன்றவர்கள் தேவை” என ட்ரம்ப் விண்வெளி வீரர்களைப் பாராட்டியுள்ளார்.
2028-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மனிதனை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் முயற்சிகள் குறித்து நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இதன்போது, “எனது ஜனாதிபதி காலத்திலேயே மற்றுமொரு மனிதன் நிலவில் நடப்பதற்கான ‘நல்ல வாய்ப்பு’ உள்ளது. அதற்கான அனுமதியை நாம் வழங்கிவிட்டோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சந்திரனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதே அடுத்த கட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான பாணியில் இந்தச் சந்திப்பை ஒரு செய்தியாளர் சந்திப்பாக மாற்றிய ட்ரம்ப், பல சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளியிடத் தான் இன்னும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் மற்றும் ஈரான் போர்கள் ஒரே காலப்பகுதியில் முடிவுக்கு வரும் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் எஃப்பிஐ பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தனது முதல் பதவிக்காலத்தில் ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்ற இராணுவப் பிரிவைத் தொடங்கியதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் 6-ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதியைச் சுற்றி வந்து, பூமியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தனர். ஆர்டெமிஸ் III விண்வெளித் திட்டம் 2027-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
விண்வெளி வீரர்களுடன் ட்ரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளதுடன், விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை இது நிரூபிப்பதாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.




