மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், லெபனானில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அந்த நாட்டுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்குமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்குதல் மற்றும் இஸ்ரேல் – லெபனான் இடையே அமைதியான உறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லெபனான் தரப்பில் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், லெபனானுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது என நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்பிசி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில்,
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு நெதன்யாகுவிடம் தான் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 303 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.




