வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC), பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க் வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம், நேற்று மதியம் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.வங்கதேசத்தில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றதாலும், அந்நாட்டில் சில தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு இடைக்கால அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச உயர் ஆணையருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கவலையைத் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கும் வங்கதேச மக்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை வலுப்படுத்தவே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.





