வளைகுடா நாடுகளை தாக்க மாட்டோம்! பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு தளமாக பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாட்டை தாக்குவோம் என்றும் அண்டை நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் ஈரான் அதிபர் மசோத் பெசோஷ்கியான் தெரிவித்துள்ளார்.அந்த நாட்டு அரசத் தொலைக்காட்சியில் விடுத்துள்ள விசேட காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த நாட்டின் மீது கடந்த 28 திகதி அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து திடீர் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.இதனால் கடும் கோபமடைந்த ஈரான், இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகின்றது.

இந்நிலையில், ஈரானிய ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தலைமைத்துவ உத்தரவின்படி, இனிவரும் காலங்களில் அண்டை நாடுகள் முதலில் தாக்குதல் நடத்தினால் ஒழிய, அவர்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் அல்லது அமெரிக்காவை ஆதரிப்பது கௌரவம் மற்றும் சுதந்திரத்திற்கான பாதை அல்ல என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் தமது நாடு சரணடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.