பிரான்சில் இடம்பெற்ற கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் கடற்புலிகளின் ஏற்பாட்டில் பகல் 13.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைத்தார்.

மாவீரர் பொதுப்படத்திற்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க முன்னாள் போராளி ஒருவர் மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. அமைதியாக அணிவகுத்து அனைவரும் கரும்புலி மறவர்களுக்கான மலர்வணக்கத்தைச் செய்தனர். தொடர்ந்து கரும்புலிகள் நினைவான எழுச்சி கானங்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் நினைவு உரைகள் இடம்பெற்றன.

நிழ்வின் நிறைவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலைத் தொடர்ந்து. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.