எதிர்காலத்தில் இலங்கையிலும் பெரும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு

இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால், இதே நிலைமை தான் எதிர்காலத்திலும் நிலவும் என்று எண்ணுவது பிழை. என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

புவிநடுக்க அனர்த்தம் முன்கூட்டியே எதிர்வு கூற முடியாத, தடுக்க முடியாத இயற்கை அனர்த்தமாகும். ஆனால், அதன்மூலம் ஏற்படும் பாதிப்புக்களைக்  குறைக்க முடியும். ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன.

ஆகக் குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல் 2004 ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று புவிநடுக்க அனர்த்தத்தினால் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை எனவும் கூறியுள்ளார்.