ஒலிப்பதிவை அகற்றவும்

தொலைபேசியில் ஒரு நபரை துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே காவல் துறையிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த கிளிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் காவல் துறையிடம் கோரியுள்ளார்.

ஷான் கனேகொட என்ற நபர் புதன்கிழமை(5) இராஜாங்க அமைச்சருக்கு தொலைபேசியில் பலமுறை தொந்தரவு செய்ததாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த நபரை மீண்டும் அழைத்து இது தொடர்பாக விசாரிக்க, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த உரையாடலின் போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நிதானம் இழந்து அந்த நபரை மோசமான வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும்   கிளிப் தற்போது இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதால், அந்த கிளிப்பை பரப்புவதில் இருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவரது அலுவலகம் காவல் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.