கொழும்பில் மூன்று இளம் பெண்கள் கைது!

கொழும்பில் பொலிஸாரின் உத்தரவை மீறி டிபென்டர் ரக ஜீப்பை ஓட்டிச்சென்ற மூன்று இளம் பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவல மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு உயர்தர பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் மருதானை டீன்ஸ் வீதிப் பகுதியில் ஆபத்தான முறையில் ஓட்டிச் செல்லப்பட்ட டிபென்டர் காரை நிறுத்துமாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மருதானை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமிக்ஞை காட்டினர். இருப்பினும், டிபென்டர் நிறுத்தாமல் முன்னோக்கி ஓட்டி செல்லப்பட்டுள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் வாகனம் தொடர்பில் பொலிஸ் செயற்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் வாகனத்தை நிறுத்துமாறு மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் சமிக்கை செய்தார்.

குறித்த உத்தரவை மீறி டிபென்டர் வாகனம் முன்னோக்கி செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், கெலே பொல பகுதிக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரை நிறுத்துமாறு சைகை செய்த போதும், இளம் பெண்கள் குழு நிறுத்தாமல் டிபென்டர் காரை முன்னால் செலுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் பொலிஸார் அந்த வாகனத்தை துரத்தி சென்று தடுத்து நிறுத்தினர். இதன்போது குறித்த யுவதிகளுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் சந்தேகத்திற்குரிய யுவதிகள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.